ஜார்கண்ட் மலைப்பகுதியில் ஏற்பட்ட ரோப் கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின், தியோகர் மாவட்டத்திலுள்ள திரிகுட் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் `ரோப்-வே' கேபிள் கார்கள் இயக்கப்படுகிறன. இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப் கார் வே-யான திரிகுட்டில் நேற்றைய தினம் வழக்கம் போல் இயக்கப்பட்டு வந்த 2ரோப்கார்கள் திடீரென தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் 2 ரோப்கார்களில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எதிர்பாராத இந்த விபத்தால் அந்த ரோப்வேயில் இருந்த அனைத்து ரோப் கார்களில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கி கொண்டனர். இதில் 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 45 பேர் வரை சிக்கியிருக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவத்துக்குப் பிறகு அங்கு பணியிலிருந்த மற்ற ஊழியர்களும், ரோப் கார் மேலாளரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தியோகர் துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி, ``நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இருக்கிறது. ரோப் வேயில் உள்ள கேபிள் கார்களில் இன்னும் சிலர் சிக்கியுள்ளனர். மேலும், அவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். அனைத்து சுற்றுலாப்பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள். அதேநேரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.